Monday, November 10, 2014

கூவம் நதிக்கரை சோறு (Koovam Nadhikkarai Soru)

நடிகர் கமல்ஹாசனின் அறுபதாவது பிறந்த நாள் 11/07/2014 அன்று நன்றாக நடந்தேறியது. அந்தக் கொண்டாட்டத்தில் அவரது நற்பணி இயக்க உறுப்பினர்கள் மாதம்பாக்கம் ஏரியை சுத்தப்படுத்த தொடங்கியது அந்த சென்னைக் கொசுவுக்கு மிகவும் ஏமாற்றமாகப் போனது. இது நாள்வரை எத்தனைக்கெத்தனை அசுத்தம் கூடி அதனால் அந்தக் கொசுவுக்கு சந்தோஷம் மிகுதியானதோ அந்தக் காலம் மாறிப் போய் இப்போது அந்த கொசுவின் குஷி உணர்ச்சி வடியத் தொடங்கிவிட்டது. 

கமல்ஹாசனின் நற்பணியாளர்கள் மாதம்பாக்கம் ஏரி தொடங்கி இருபத்தியைந்து ஏரிகளை சுத்தம் செய்ய முடிவு செய்ததை கேள்விப்பட்டு அந்தக் கொசு வருத்தம் கொண்டது. "தூய்மையான பாரதம்" (Swacch Bharat Abhiyan) என்று பெரிய வேள்வி மாதிரி பிரதமர் மோடி ஏனடா தொடங்கினார் என்று அதற்கு ஒரே கவலையாகியது. அந்தக் கொசுவை வாழ வைக்கும் கடவுளே அசுத்தம் தான். அங்கணம்  இருக்க அசுத்தம் நீங்கி பாரதம் முழுவதும் வெண்மையான தூய்மை பளீரிட்டால் அந்த ஈனப் பிறவி கொசு வாழ வழியின்றி எங்கே தான் போகுமாம்? அதனைப் பற்றி யாரும் கவலை கொண்டார்போல தெரியவில்லையே.

ஆனால், ஒரு விதத்தில் அந்தக் கொசுவுக்கு போதைக் கிளர்ச்சி தரும் வேறு ஒரு விஷயமும் அன்று நடந்தது. யாதெனில், சென்னையிலிருந்து தொலை தூரத்தில் உள்ள என்னை மாதிரியான ஒரு எழுத்தாளன் வேறு வேலை இன்றி அந்தக் கொசுவை மையமாக வைத்து ஒரு கதை புனைய எத்தனிப்பான் என்று அது இம்மியளவும் கற்பனை செய்து பார்க்கவில்லை.

விதியால் சபிக்கப்பட்டு கருப்பாக முகப் பொலிவே அல்லாது இருந்த அந்தக் கொசு யாரையும் என்றைக்கும் ஈர்த்ததில்லை.  அந்தக் கொசுவை யாரும் என்றும் எதற்கும் வரவேற்றதுமில்லை. அது "ஙொய்" என்று ரீங்காரமிட்டு அருகாமையில் வந்தாலே மக்கள் அதனை அடித்துக் கொல்லவே  கை ஓங்கி அது பழக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில் அந்தக் கொசுவை வைத்து ஒரு கதைப் புனைவா?! தான் ஒரு கதையின் நாயகனாகப் போகிறோம் என்கிற சமாச்சாரம் கேட்டதும் துக்கம் வடிந்த அதன் முகத்தில் சட்டென்று சந்தோஷ மின்னல் அடித்தது.

நாற்றம் பிடித்த கூவம் தான் அந்த கொசுவின் வாழ்க்கையில் வற்றாத ஜீவநதி. கூவத்தின் கரையோரம் தான் அந்தக் கொசுவின் அம்மா அதனை ஈன்றெடுத்திருந்தாள். ஆரம்பக் காலத்தில் அதனுடைய அம்மா அதனைப் பெற்றெடுத்து நிறைய முத்தங்களைப் பொழிந்து அன்புக் காட்டி வளர்த்தாள். மழலைப் பிராயம் தொடங்கி ஒவ்வொரு குழந்தைப் பருவத்தையும் அது மகிழ்ச்சியாக தான் கடந்து வந்தது. ஆனால் அதனுடைய அம்மா மரணித்தப் பிறகு அன்பு காண்பிக்க யாருமே இல்லாது அம்போ என்று ஆகிவிட்டது அந்தக் கொசு. அந்தி சாய்ந்த போது உணவு அருந்த வெளியே சென்ற அதன் அம்மா வீடு திரும்பவே இல்லை. கொடூரமான மனிதர்களின் உலகத்தில் யாரோ தன் அம்மாவை அடித்துக் கொன்றிருக்க வேண்டும் என்று அதுவாகவே அனுமானித்துக் கொண்டது. விந்தளித்த அப்பன் யாரென்று அறியாது, தயை காட்டிய தாயையும் தொலைத்து விட்டு அனாதையாக இந்த பூமியில் பரிதவித்தது அந்தப் பாவக் கொசு.

பாலூட்டி சீராட்ட அம்மா இல்லாது அதன் வாழ்க்கை திடீரென வெறுமையாகிப் போனவுடன் அந்தக் கொசு உண்ணாது உறங்காது க்ஷீணம் ஆகிப் போனது. வாழ்க்கையில் கற்றுக் கொள்ளத்தான் எத்தனை விஷயங்கள் உள்ளன? முதலில் உணவை எப்படி கொன்று புசிக்க வேண்டும் என்றறிய வேண்டும். அந்த சூக்ஷமத்தை கல்லாதார் மரணம் ஏய்தி அமரராகி விடுவார். இதனை அந்தக் கொசு மரணத்தின் விளிம்பில் தான் அறிந்தது. பசியோ பிடுங்கி எடுத்தது. ஆனால் உணவை மட்டும் காணோம். அதற்கு உணவின் அருமை புரிய ஆரம்பித்தது. உயிரை இறைவன் ஒன்றும் சாஸ்வதமாய் கொடுத்து விடவில்லை. ஆரம்பத்தில் உயிர் பிச்சையிட்ட அவன் அந்தக்கணம் தொடங்கி உயிரை தக்க வைத்துக் கொள்ளும் தன்மையை அந்தந்த உயிர்களின் திறனுக்கேற்ற மாதிரி விட்டுவிட்டான். உணவை யாரும் வாயினில் கொணர்ந்து ஊட்டி விடப் போவதில்லை. தனக்கு தானே தேடிச் சென்று உணவு பிடித்து உண்ணவேண்டும் என்கிற உண்மையை அந்தக் கொசு பசியின் கோரத் தாக்கத்தில் புரிந்து கொண்டது.

முதன் முதலில் சருமம் குதறி குருதி குடித்த அந்த அனுபவத்தை அந்தக்  கொசு என்றைக்குமே மறக்க இயலாது. கூவம் நதிக் கரையில் மின்சார வசதியற்ற ஒரு குடிசையில் தான் அதன் வயிறு முதன் முறையாகப் புடைத்தது. விளக்கின்றி இருட்டுச் சாபம் பெற்ற அந்தக் குடிசையில் காற்றுப் புழக்கம் இன்றி உஷ்ணம் கூடிய சுபயோக சுபதினம் அது. யாரோ ஒரு பெயரற்ற நோய்வாய்ப் பட்ட மனிதன் அந்தக் கொசுவுக்கு தயைகூரவே பிறவியெடுத்த மாதிரி அங்குப் படுத்திருந்தான். தாயை இழந்து சில தினங்களாக உண்ணாது பரிதவித்த அந்தக் கொசு பறக்கவே மிகவும் சிரமப் பட்டது. அந்த மனிதனின் மீது தன் உடல்விமானத்தை தரை இறக்க திறனின்றி திராணியற்று தவித்து திணறியது. 

நல்லகாலம், ஆவி ரூபத்தில் வந்த அதன் அம்மா தான் அது வெல்வதற்கு வாழ்த்தியிருக்க வேண்டும். இல்லையென்றால் எப்படி அந்த மனிதன் அறியாதவாறு அவன் தோள்ப்பட்டையில் சலனமின்றி இறங்கினோமென்றும், அவன் உறக்கம் கலையாத வண்ணம் அவன் சதையில் துளையிட்டு உறிஞ்சி இரத்தத்தைத் தான் குடித்தோமென்றும் அந்தக் கொசுவுக்குப் புரியவில்லை.

எப்படியோ, முதன் முறையாக ஒரு மனிதனின் இரத்தத்தை குடிக்க அது கற்றுக் கொண்டு விட்டது! வயிறு நிரம்ப உண்ட பிறகு உலகத்தின் அத்தனை சக்தியும் தனக்கே வந்து மகத்தான வல்லமை பெற்ற மாதிரி அந்தக் கொசுவுக்கு தோன்றியது.  கூவம் நதிக்கரையில் வேகமாகப் பறக்கும் போது அந்தக் கொசுவின் மனதில் ஐபோனில் "angry birds" விளையாடிய சிறாரின் மனமகிழ்ச்சி போல இன்பம் பொங்கியது. நடுநடுவே ஏதாவது ஒரு குடிசையின் உள்ளே கள்ளத்தனமாக சென்று, அறியாத ஒரு மானுடனின் உடலிலிருந்து இரத்தம் திருடும் கலைத்திரனை அது நன்றாக செம்மையாக்கிக் கொண்டது. 

சில காலம் சென்ற பிறகு சீராகச் சென்றுக் கொண்டிருந்த அதன் வாழ்வில்  ஒரு தோய்வு ஏற்ப்பட்டது. ஏனென்றால், விதவிதமான வியாதிகள் பாரித்த குடிசைவாசிகளின் ருசியற்ற இரத்தம் உண்டு உண்டு அந்தக் கொசுவுக்கு நாக்கு செத்துப் போனது. புதிதாக எதையாவது செய்து ஆரோக்யமான மனிதர்களின் இரத்ததை ருசி பார்க்க வேண்டும் என்ற அவா அதன் மனதில் ஆக்ரோஷமாக எழுந்தது. 

கூவம் நதிக்கரையை ஒட்டிய ஒரு குடியிருப்புக்கு அந்தக் கொசு முதன் முறையாக பறந்து சென்றது. அங்கே இருந்த மக்களையும் அவர்கள் சார்ந்த வர்த்தக ஸ்தாபனங்களையும் அது சில வாரங்களில் ஆராய்ந்து அறிந்துக் கொண்டது. அங்கே வெளிநாடுகளுக்கு ரெடிமேட் துணிமணிகளை ஏற்றுமதி செய்யும் ஒரு தொழிற்சாலை இருந்தது. அந்த வியாபாரதளத்தில் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்து வந்தனர். அந்தப் பகுதியில் இருந்த வீடுகளில் குடியிருந்தவர்களனைவருமே அந்த நிறுவனத்தில் தான் வேலை பார்த்து வந்தனர் என்று அந்தக் கொசு அறிந்துக் கொண்டது. 

கணவனும் மனைவியும் என்று ஒரே குடும்பத்திலிருந்து பல பேர்கள் அந்த நிறுவனத்தில் வெவ்வேறு இலாகாவில் வேலை பார்த்து வந்தனர். நாள் முழுவதும் வேலை பார்த்து, சனிக் கிழமையும் வியர்வை சிந்தியும் வேலை செய்து ஐயாயிரமோ ஆறாயிரமோ மாதச் சம்பளம் பெற்று அந்த மானுடர்கள் குடித்தனம் நடத்தி வந்தனர். அந்தக் குடியிருப்பிலிருந்த மக்களை ஏழைகள் (poor class) என்று கருதுவதா அல்லது கீழ் நடுத்தரவர்க்கம் (lower  middle class) என்று கொள்வதா என்று அந்தக் கொசு குழம்பிப் போனது. புதிய பாரதத்தில் இந்த இரு பிரிவுக்கும் என்ன வித்தியாசம் என்று அதற்குப் புரியவில்லை. 

குளிர்சாதனப் பெட்டி அத்தியாவசியமென்று கருதினால், அது என்னவோ அங்கு அனைவர் வீட்டிலும் இல்லை. ஆனால் ஒவ்வொரு குடும்பத்திலும் சின்னதாக ஒரு வண்ணத் தொலைகாட்சிப் பெட்டி கேளிக்கையளிக்க என்னவோ இருந்தது. சமைத்ததை சில மணித்துளிக்குள் உண்டு விட வேண்டும். இல்லையென்றால் சென்னையின் சூடு தாங்காது அந்த உணவுப் பொருட்கள் ஊசிப் போவது திண்ணம். அந்த ஊசிப் போனவற்றை உண்ண அந்த வீடுகளில் நிறைய ஈக்கள் இருந்தன. எதைத் திங்கலாம் என்று சதா சர்வதா காலமும் மொய்த்துக் கொண்டிருந்த ஈயினத்தைப் பார்த்து அருவருப்பு அடைந்தது அந்தக் கொசு.

இரவானப் பின் வலையிடப் படாத ஜன்னல் வழியாக பெருஞ்சேனைப் போல திரண்டு வரும் தன் சாதிசன கொசுவினத்தை  பார்த்த பிறகு நம் கதாநாயக கொசுவுக்கு ஆச்சர்யமாகிப் போனது. இத்தனைக் கொசுக்களை ஒரு சேர அந்தக் கொசு எங்கும் பார்த்தது இல்லை. கூவம் நதிக் கரையருகே இதுகளெல்லாம் இருந்தனவா என்ன? ஆச்சர்யத்தால் திறந்து கிடந்த தன் வாயை "ஈ புகுந்து கொண்டு விடப் போகிறது" என்றஞ்சி பயந்து மூடிக் கொண்டது அந்தக் கொசு.

அந்தக் குடியிருப்பு மக்கள் மாலை வீடு வந்தப் பின் காபி தண்ணியருந்திய பிறகு பரபரவென்று சமையல் செய்து, கணவன் மனைவி சகிதம் குழந்தைகளுடன் ஒன்றாக உட்கார்ந்து குடும்ப நேரம் அனுபவித்ததை பார்த்து அந்தக் கொசுவுக்கு இறந்து போன காரணத்தினால் இல்லாத தன் அம்மாவை நினைத்து தாபம் உண்டாகியது. அந்த நிமிடத்தில் அனாதை வாழ்க்கையின் கொடுமையை அது நன்கு உணர்ந்து கொண்டது.

அந்தக் குடும்பங்கள் மகிழ்ச்சிப் பொங்க அமர்ந்து Sun TV சீரியல் பார்த்து அகமகிழ்ந்தது கண்டு அந்தக் கொசுவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் அது ஒரு விஷயத்தைப் சட்டென புரிந்துக் கொண்டது. சீரியல் பார்க்கும் போது அவர்கள் சீரியல் தரும் சிற்றின்பத்தில் மூழ்கி ஒரு மாதிரி செயலிழந்து விடுகிறார்கள் என்று அறிந்துக் கொண்டது. சீரியல்கள் தந்த அந்த மோன நிலையில், மனிதர்களின் பலவீனமான அந்தத் தருணத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை கடித்து இரத்தம் உறிஞ்சக் கற்றுக் கொண்டது அந்தக் கொசு. அவர்கள் சீரியல்களின் சுவாரசியத்தில் கொசுக்களை ஒன்றும் செய்யாது விட்டது அந்தக் கொசுவுக்கு சௌகரியமாகிப் போனது. உணவருந்தச் சென்று உயிர் விட்ட கதையாகிவிடாமல், உணவருந்தி, உயிர் மிஞ்சி, வெற்றி வாகை சூடிய வீரனாக வெளிவரக் கற்றுக் கொண்டது அந்தக் கொசு.

அந்தக் கொசுவுக்கு தான் இரத்தம் குடிக்கின்ற காரணத்தினால் மனிதர்களுக்கு எம்மாதிரியான வியாதியெல்லாம் வருகிறது என்று அறியாமலிருந்தது. அந்த பாதகத்தை அறிந்தாலும் பசிக்கின்ற நேரத்தில் அந்தக் கொசுதான் என்ன செய்யமுடியும்? ஓலமிடுகின்ற வயிற்றுக்கு யார் தான் பதில் சொல்லுவது? ஆகையால் இரவு நேரத்தில் மனிதர்களின் மகிழ்ச்சியை கெடுப்பதற்கென்றே படை எடுத்து வந்த தன் மற்ற சாதிசனத்தோடு  சேர்ந்து அந்தக் கொசுவும் அந்தக் குடியிருப்பிலிருந்த மனிதர்களை கடித்து அட்டூழியம் செய்து வந்தது.

கொசு மற்றும் ஈக்களின் காரணத்தால் அந்தப் பகுதியிலிருந்த மக்களில் பலருக்கு விதம் விதமாக வியாதிப் பிடுங்கித் தின்றது. திடீரென்று 104 காய்ச்சலா? வாந்தி பேதியா? அந்த மாதிரி விசனங்களையெல்லாம் அடிக்கடி சந்தித்து அந்த மக்கள் நன்றாகப் பழக்கப்பட்டு விட்டிருந்தனர். சின்ன சின்ன குழந்தைகள் ஜன்னி வந்தா மாதிரி காய்ச்சல் அதிகம் ஆகி வலிப்பு வந்து துடிப்பதுவும், அவசரமாக ஆட்டோ விளித்து டாக்டர் கிளினிக்குக்கு செல்வதுவும் அங்கே சகஜமான ஒரு விஷயமாகிப் போனது.

அந்தப் பகுதி மக்களுக்காக அங்கே ஒரு டாக்டர் 24 மணி நேர கிளினிக் வைத்து இருந்தார். அந்த டாக்டரை ஒரு முறை நேரில் சந்தித்த அந்தக் கொசு அவர் மீது ஒரு பிரமிப்புக் கொண்டது. கன்னங்கரேல் என்று சூரிய ஒளிப் பட்டு கருத்துகிடந்த அந்தப் பகுதி மக்கள் மத்தியில் அவர் செந்நிறமான மேனி கொண்டு நல்ல களையாகத்தான் இருந்தார். அந்தப் பகுதி மக்களில் யாரும் செய்யாத மாதிரி அந்த டாக்டர் ஜம்மென்று ஆடை அணிகலங்களணிந்திருந்தார். பளிச்சென்று வெள்ளை நிறத்தில் கோட்டென்ன, சூட்டென்ன, டையென்ன, பவுடரும், சென்ட்டும் போட்டு ஷோக்காக இருந்தார். அந்தக் காலத்தில் அவரின் மூக்குக் கண்ணாடி தடிமனாக இருந்திருக்கக் கூடும். ஆனால் இந்தக் காலத்திர்கேற்றார்ப் போல மெலிதான நவநாகரீகக் கண்ணாடியணிந்திருந்தார். அதென்னவோ ஐபோன், அண்ட்ராயிடு போன் என்கிறார்களே, அதில் பெரியதாக ஒன்றை சட்டைப் பையில் வைத்திருந்தார். நோயாளிகளை பார்க்கும் இடை நேரத்தில் அடிக்கடி அதில் வந்த குறுஞ்செய்தியோ அல்லது மின்னஞ்சலோ என்னமோ, அதனை பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்தப் பகுதியின் மக்கள் தான் அவரின் வாடிக்கையாளர்கள். Sun TV சீரியல் பார்க்கும் போது கொசு கடித்து காய்ச்சலுற்ற அப்பாவிகள் அவர்கள். அந்த டாக்டரின் கைராசிக்கு மதிமயங்கி, தன்னை எப்படியாவது காப்பாற்றிவிடுவார் என்று நம்பிக்கை கொண்டு அவரின் கிளினிக்கின் வாயிலை அடைத்து குழுமியிருந்தனர். அவரின் பார்வை நேரம் வேண்டி நின்று சிவனே என்று அங்கு காத்திருந்தனர். டாக்டரும் நிசமாகவே நல்ல கைராசி உடையவராகத்தான் இருந்தார்.

முப்பத்தியைந்து வருடங்களுக்கு முன்னர் அவர் அந்தப் பகுதியில் கிளினிக் தொடங்கிய போது அந்தப் பகுதி இத்தனை வளர்ச்சிப் பெற்றிருக்கவில்லை. அவரது மருத்துவக்  கல்லூரி நண்பர்கள் ஒவ்வொருவரும் படிப்பு முடிந்தக் கையோடு வெவ்வேறு இடங்களில் கிளினிக் தொடங்கியபோது அந்த டாக்டர் அவரது நண்பர்களிடம் அந்தப் பகுதியில் கிளினிக் தொடங்க இருப்பதுப் பற்றி சொன்னார். அவர்கள் அவரது முடிவை பரிகசித்தனர். "கூவம் நதிக்கரையருகே கிளினிக் வைக்க உனக்கு என்ன தலையெழுத்தா என்ன, பேசாமல் புரசைவாக்கமோ, அல்லது கீழ்ப்பாக்கத்திலோ ஒரு நல்ல இடம் வாங்கி மருத்துவமனை கட்ட யோசனை கூறினர். சாமானியர்கள் மாத்திரமே வாழுகின்ற அந்த இடத்தில் ரூபாய் ஐந்தும் பத்தும் வாங்கி எங்கிருந்து முன்னுக்கு வர முடியுமென்றும் அவர்கள் சொன்னார்கள்.

ஆயினும், அந்த டாக்டருக்கு போட்டியற்ற ஊரில் மருத்துவமனை தொடங்கினால் நன்றாக வியாபாரம் ஆகி தனக்கு வளம் பெருகும் என்று தோன்றியது. மேலும் வியாதிவெக்கை பெருக "கூவம் நதியிருக்க பயமேன்" என்று வியாபார நுணுக்கமரிந்த அவரின் புத்தி ஆருடம் சொன்னது. ஆக துணிந்து ஒரு முடிவு எடுத்து அவர் அந்த கிளினிக்கை தொடங்கி இருந்தார். அப்போது தான் மணமான அவருக்கு அவரின் மாமனார் ஒரு வீடு கட்டி கொடுத்து அதன் வாயிலிலேயே ஒரு அறையை க்ளினிக்காக மாற்றி அமைத்தும்  கொடுத்திருந்தார்.

அவர் எதிர் பார்த்த மாதிரியே வியாபாரம் நன்றாகவே சூடுப் பிடுத்துக் கொண்டது. அந்த ரெடிமேட் தொழிற்சாலை விரிவாகவும், தொழிலாளர்கள் பெருகவும், ஜனத்திரளால் அசுத்தம் கூடவும், அதனால் வியாதிகளும் ரோகிகளும் கூடக்கூட அந்த டாக்டருக்கு மகிழ்ச்சிப் பொங்கியது. எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணம் கொண்டவர் தான் அந்த டாக்டர். ஆயினும் மருத்துவ தொழில் ஆயிற்றே, ஆக, எல்லாரும் உடம்பு சுகமாக இருந்தால் பின்னர் அவரின் பாடு திண்டாட்டம் தான் என்று அவர் நன்றாக அறிந்திருந்தார். கொசுக்கள் கூடி, மாலை வேளைகளில் மனிதர்கள் வீட்டில் வேட்டையாடினால் அந்த டாக்டரின் கல்லாப் பெட்டிக்கு கொண்டாட்டம் தான்! மனிதர்களுக்கு காய்ச்சல் வந்து அவர்கள் நோயுற்றால் அவருக்கு அந்த துக்கத்திலும் ஒரு இன்பம் பிறந்தது.

தன் மனசாட்சிக்கு மிகவும் பயந்தவர் அந்த டாக்டர். ஆக, வைத்தியம் பார்ப்பதில் பாகுபாடு இன்றி தன் தொழிலை நேர்த்தியாக செய்து மனிதர்களை குணப்படுத்தி நல்ல பெயர் வாங்கினார். ஆனால் அவர் பண விஷயத்தில் ரொம்பவே கறார். ஆரம்பக் காலத்தில் வெறும் MBBS டாக்டராக அவர் இருந்த காலத்தினால் வெறும் ஐம்பது ருபாய் மாத்திரம் தான் கட்டணமாக வாங்கினார். பின்னர் அவர் MD படிப்பு முடித்ததும் தன் ரேட்டை ஏற்றிக் கொண்டார். MD சேர்ந்து படிக்க கொஞ்சம் லஞ்சம் கொடுக்க வேண்டியதாகிப் போய் விட்டது. பாழாய்ப்போன அரசாங்கத்தில் லஞ்சம் இல்லாது எதனை தான் சாதிக்க இயலும்? மற்றும் அவரை வெளியூர் medical collegeலிருந்து சென்னை கல்லூரிக்கு மாற்றல் வாங்க வேறு தனியாக லஞ்சம் கொடுக்க வேண்டியதாகிப் போனது.

இந்த மாதிரி சில கடன் தொல்லைகளில் அவர் சிக்கினாலும் அதனால் அவர் தவித்துப் போய்விடவில்லை. நிறைய வியாதி வகைகளை அந்தக் குடியிருப்பு மக்களிடையே பெருக்கி அந்த டாக்டருக்கு லாபகரமாகதான் விதியைக் கொண்டு சென்றான் இறைவன். ஐம்பது ரூபாய் கட்டணம் இப்போது இருனூற்றைம்பதாக மாறி விட்டிருந்தது. வீடு முழுவதும் செம்மையாக AC செய்திருந்தார். கொதிக்கும் கோடையிலும், ரஜினிகாந்த் ஒரு படத்தில் பாடுவது போல "அடிக்குது குளிரு" என்று அவர் பாடலாம். அந்த மாதிரி வீடு முழுவதும் ஜில்லிப்பு! காலையில் அவரின் பார்வை நேரம் 8 மணி முதல் மதியம் 1 மணி வரை. பின்னர் அவர் தன் க்ளினிக் அறையிலிருந்து தன் வீட்டுக்குளே சென்று உணவு அருந்தி விட்டு சற்று கண்ணயர்வார். பின்னர் மாலை 4 மணிக்கு திரும்பவும் கிளினிக் தொடங்கி இரவு 11 மணி வரை நோயாளிகளைப் பார்ப்பார்.

அந்தக் கொசுவுக்கு அந்த டாக்டரின் கிளினிக்குக்கு உள்ளே சென்று சிலீரென்ற ACயில் உட்கார்ந்து சற்று இளைப்பாரணும் என்று ரொம்பவே ஆசை. ஆனால் AC விரயமாகாத வண்ணம் அவரின் கிளினிக் பாய் நோயாளி உள்ளே நுழைந்தவுடன் கதவை அறைந்து சாற்றி விடுவான்.  அந்த டாக்டர் வேலை பார்க்கும் சமயமெல்லாம் அந்த கிளினிக் பாய்  அவர் கூடவே இருப்பான். காலையில் ஒரு பழைய சைக்கிளில் அங்கு வந்த பிறகு இரவு டாக்டர் கிளினிக்கை மூடிய பிறகே அவன் தன் வீட்டிற்குச் செல்வான். அவனுக்கு அவர் மாதம் ஆறாயிரம் ரூபாயோ அல்லது ஏழாயிரம் ரூபாயோ சம்பளம் கொடுத்து வந்தார். எட்டாவது பரிட்ச்சையில் தேர்ச்சியடையாத அவன் அந்த சம்பளத்தை சொர்க்கமென மதித்திருந்தான்.

பெரும்பாலும் தன் வீட்டை விட்டு வெளியவே வராத அந்த டாக்டர் அவ்வப்போது தன் மகிழுந்தில் ஏறி கடைகண்ணிக்கு செல்வதை அந்தக் கொசு கண்டுக் கொண்டது. அவர் கார் ஏறி வெளியே போவதர்க்கு முன் இருக்கும் அந்த சில நிமிடங்களே ஆன தருணத்தில் அந்தக் கொசு தன்னுடைய வெகுநாள் ஆசையை பூர்த்தி செய்து கொள்ள முடிவு செய்தது. அந்தக் கொசுவுக்கும் வயசாகிக் கொண்டே போகிறது, எப்போது தான் ஆரோக்யமாக, புஷ்டியாக உள்ள ஒரு ஆளின் இரத்ததை அது குடிப்பதாம்? வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறிய அந்தக் கொசு ஒரு நல்ல நாளில் தைரியமாக அந்த டாக்டரின் கழுத்துப் பின்புறத்தில் ஓசை எழாத வண்ணம் வந்தமரக் கற்றுக் கொண்டது. அந்தக் கொசு அவரின் கழுத்துப் பட்டையில் உட்கார்ந்து விட்டதை அவரும் அறிந்திருக்கவில்லை.

இது வரை வெற்றியே சந்தித்து வந்த அந்தக் கொசு அந்த டாக்டரின் இரத்தம் குடிக்க ஆசைப்படுவது தன் உயிரேயே மாய்த்து விடக்கூடிய பேராசை என்று அறியவில்லை. கிளினிக் பாய் அவருக்கு கார் ஓட்ட, அவர் காரின் பின் வரிசை ஆசனத்தில் அமர்ந்து ஏதோ பேப்பர் படித்தவாரே பயணிக்கும் போது தான் அந்தக் கொசுக்கு "ஆஹா, இது தான் சரியான தருணம்" என்று தோன்றியது.  சர்ரென்று தன்னுடைய வாய்ப் பகுதியான proboscisஐ  அந்த டாக்டரின் சருமத்திருக்குள் உள்ளிட்டு அழுத்தியது. டாக்டர் தன்னை கவனிக்கிறாரா என்று பயந்தவாறே சுற்றும் முற்றும் பார்த்தது. பேப்பர் படிக்கும் சுவாரசியத்தில் டாக்டரும் அந்தச் சின்னக் கொசுக்கடியை முதலில் கவனிக்கவில்லை.

தண்ணியில்லாத சென்னை நகரில் நூறு இருநூரடி போர் போட்டு பல மாடிக் கட்டடங்களுக்கு தண்ணி விநியோகம் செய்ய உறிஞ்சும் பம்பு மாதிரி அந்தக் கொசு பலத்தோடு டாக்டரின் இரத்ததை உள்ளிழுத்தது. அவரின் இரத்த சுவை அதன் நாக்கில் பட்டவுடன் ஏதோ அமுதினை பருகியது போல அதற்கு பரவரசம் பரவியது. ஆஹா, என்ன ருசி! நெய் கலந்து மிகுதியாக இனிப்பிட்டு செய்த பாயாசம் போலிருந்தது அவரின் இரத்தம்! இதுவரை எத்தனையோ பேர்களின் இரத்தம் பருகியிருந்தும் அதென்னவோ ஒரு புதிய இரத்தம் போலிருந்தது!

மதுவருந்திய கிறக்கத்தை அந்த இரத்தம் கொடுக்கும் என்று அந்தக் கொசு எதிர்பார்க்கவே இல்லை. ஒரு மாதிரி கிறக்கத்தில் செயலிழந்த சமையத்தில் தான் அதன் வாழ்க்கையின் "ஐயகோ" தருணம் வந்துத் தொலைத்தது. எமதர்ம ராஜனும் யாரோ சொல்லி அனுப்பி வைத்தார்ப் போல வந்துத் தொலைத்தான்.  அந்தக் கொசுவின் வாழ்வில் கருமேககங்கள் சூழ்ந்து, இருள் கவ்வி "நீ இப்போது சாகக் கடவாய்" என்று விதிக் கடவுள் சாபம் இட்டார்ப் போல ஒரு அசரீரி கேட்டது. அந்த க்ஷணத்தில் கொசுக்கடி வலியை உணர்ந்த டாக்டர் சட்டென்று கை ஓங்கி தன் கழுத்துப் பின்புறம் தன்னை தானே அடித்துக் கொண்டார். அதாவது தன் சருமத்தின் மீதமர்ந்து தன்னுடைய இரத்தத்தையே பருகிக் கொண்டிருந்த அந்த கொசுவை ஒரு போடுப்  போட்டார். தனக்கு தன்னடி வலித்தால் என்ன, அந்தக் கொசு கட்டையில் போக வேண்டும். அதுவே அவரின் அப்போதைய உக்கிரம்.

சில மில்லிமீட்டர் அளவே உரு கொண்ட அந்தக் கொசு அந்த ஆறடி டாக்டரின் அதிரடி தாக்குதலை எதிர்க்க திராணியின்றி பலத்தக் காயம் பட்டது. அவரது கழுத்துப் பட்டையிலிருந்து உருண்டு கார் சீட்டின் மெது விழுந்து மறுபடியும் உருண்டு தரையில் பொத்தென விழுந்து பரிதாபமாக மரித்துப் போனது அந்தக் கொசு. கமல்ஹாசன் நற்பணி மன்றங்கள் ஏரிகளையெல்லாம் சுத்தப் படுத்தினால் தன் பாடு திண்டாட்டம் என்று நினைத்த கொசு, விதியின் பலனால் சற்றும் எதிர்பாராது அந்த டாக்டரின் கையால் மரண அடி வாங்கி உயிர்ச் சேதமடைந்தது.

கருமமே கண்ணாக அந்தக் கிளினிக் பாயும் அந்தக் காரின் அகத்தே ஒரு கொசுப் பிணம் விழுந்ததைக் கூட சட்டை பண்ணாது காரை ஒட்டி வீடு வந்து சேர்ந்தான். டாக்டரும் அந்தக் கிளினிக் பாயும் காரை விட்டு இறங்கி வீட்டுக்குள் சென்றனர். வாடிக் கருகிய மலராய் அந்தக் காரின் தரையில் அந்தக் கொசு உயிர் பிரிந்து அமைதியாகக் கிடந்தது. புதிது புதிதாக நல்ல ருசிகரமான இரத்தம் குடிக்கவேண்டும் என்ற ஆர்வம் எல்லாம் அதற்குப் போய் விட்டது. உயிர் பிரிந்த பிறகு உணவுக்கு என்ன இச்சை?

அப்போது தான் அங்கே ஒரு அருங்காட்சி நடந்தது. வானத்து தேவதைகளெல்லாம் ஒன்று கூடி அந்தக் காரின் அகத்தே வந்து ஜீவகாருண்யத்துடன் அந்தக் கொசுவை நோக்க, மெதுவாக அதன் உயிர் பிரிந்து உடலை விட்டு வெளியே வருவது நம்முடைய ஞானக் கண்ணுக்கு தெரிந்தது.

Ghost ஆங்கிலப் படத்தில் வரும் Patrick Swayze மாதிரி  அந்தக் கொசுவுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னடா இது இறந்து விட்டோம் என்று நினைத்தோம், ஆனால் உயிர் இன்னமும் இருக்கிரார்ப் போல இருக்கிறதே என்று வியந்துப் பார்த்தது. அந்தக் காரின் அகத்தே கோடானுகோடி விளக்கேற்றி வைத்தார்ப் போல வெளிச்சம் வேறு. அப்போது தான் அதற்கு தன்னை மரண அடி அடித்த டாக்டர் ஞாபகம் வந்தது. கூடவே ஒரு ஆவேசமும் வந்தது. "உன்னிலிருக்கும் 6 லிட்டர் இரத்ததில் ஒரு துளி போதும் என்று களவாட நினைத்த எனக்கு இப்படியா மரண தண்டனை வழுங்குவாய்? எப்பேர்ப்பட்ட கொடூரமான மனிதன் நீ!" என்று அந்த டாக்டரை கேள்வி கேட்டு வசை பாட நினைத்து அந்தக்  கொசு டாக்டரின் வீட்டை நோக்கி ஓடிப் போயிற்று.

வழக்கம் போல அந்த டாக்டரின் வீட்டுக் கதவு AC விரயமாகாத வண்ணம் நன்றாக அடைத்து சாத்தியிருந்தது. தூர இருந்து மூடியக் கதவை பார்த்து ஏமாற்றமடைந்த கொசு அருகில் வந்தவுடன் ஒரு ஆச்சர்யமான உண்மையை உணர்ந்தது. அதனால் இப்போது ஏதோ காற்றில் பறந்து போகிற மாதிரி அந்தக் கதவுக்குள் ஊடுருவி போக முடிந்தாது. அந்தக் கணத்தில் தான் அந்தக் கொசுவுக்கு தான் இறந்து சாமியாகி விட்டோம் என்று புரிந்தது.

முதன் முறையாக அந்த டாக்டரின் வீட்டிற்குள் அந்தக் கொசுவால் இன்று தான் உள்ளே நுழைய முடிந்தது. முதன்முறைக்கே உரித்தான ஆச்சர்யத்துடன் அந்தக் கொசு அந்த வீட்டை முற்றிலும் நோட்டம் விட்டது. டாக்டரின் மனைவி அவளுடைய தனி படுக்கையறையில் படுத்து உறங்கிப் போயிருந்தாள். அவள் படுக்கையறையில் சுவற்றில் மாற்றியிருந்த LCD TVயில் அந்தக் கால படம் ஓடிக் கொண்டிருந்தது. ஒலி கேட்காதவாறு "mute" செய்யப் பட்டிருந்தது. இன்னும் இரண்டு படுக்கையறையில் தனித்தனியே டாக்டரின் இரு குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் அறையிலும் LCD TVக்கள் தங்களை யாரும் பார்க்காததை பொருட்படுத்தாது ஏதோ படங்கள் காண்பித்துக் கொண்டிருந்தன.

டாக்டர் தனியாக ஹாலில் உட்கார்ந்துக் கொண்டு அன்றைக்கு கல்லாவில் வசூலான பணத்தை கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். மொத்தம் 110 பேஷண்டுக்கள் அவர் அன்று பார்த்திருந்தார். ஒரு நோயாளிக்கு இருனூற்றியைம்பது ரூபாய் வீதம் மொத்தம் கிட்டத்தட்ட 27500 ரூபாய் ஒரே நாளில் வசூல். டாக்டருக்கு மனசு ரொம்பியது. தனது குளிர்சாதனப் பெட்டியில் மனைவி சமைத்து வைத்திருந்த உணவை microwaveவில் சுடவைத்தார். தன்னுடைய சர்க்கரை வியாதிக்கு insulin போட்டுக் கொண்டார். பிறகு தான் கடினப்பட்டு சம்பாத்தித்த ருசிகர உணவை ரசனையே இன்றி உண்ணத் தொடங்கினார். நாளை 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டுமே என்கிற எண்ணம் மனதில் பெரும் அயர்ச்சியாக வந்து அவரை பாதி உணவு புசிக்கும் முன்பே உறக்கத்தில் ஆழ்த்தியது.

அந்தக் கொசு தன்னுடைய அம்மாவை பிரிந்து மிகவும் வருந்தியது என்று நான் முன்னமேயே வாசகர்களுக்கு சொன்னேன் அல்லவா? அந்த தாய்க் கொசு இப்போது வானுலகில் நின்று தன் சேய்க்  கொசுவை வரவேற்றது. "என்னடா கண்ணா, உலகத்தை முழுமையாக பார்த்து இன்புற்றாயா?" என்று கேட்டது. அதற்கு நம் நாயகக் கொசு பதில் சொல்லியது "நான் உலகத்தை முழுவதுமாகப் பார்க்கவில்லை, ஆயினும் கூவம் நதிக்க்கரை சோற்றுப் போராட்டத்தை பார்த்து விட்டேன், உலகம் முழுவதும் இதனை நகல் எடுத்த மாதிரித் தான் இயங்கும் என்று நான் அறிவேன்" என்றது.

உலகம் இயலும் இந்த சோற்றுத் தத்துவத்தை இத்தனை சிறிய காலத்தில் அறிந்து கொண்ட தன் சேய்க்  கொசுவை பெருமையுடன் ஆரத் தழுவி ஓங்கி நின்ற வானுலகிற்க்குள் ஈர்த்துக் கொண்டது அந்த தாய்க் கொசு.